இங்கே நான் படித்த (சுவைத்த) தமிழ் கவிதைகளை வரிசைபடுத்தி உள்ளேன்.
-------------------------------------------------------------------------
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -  
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளீர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே  
உறைவிடம் என்பது ஒன்றேயென   
உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்  
நன்மொழியே நம் பொன் மொழியாம்!   
போரைப் புறம் தள்ளி   
பொருளைப் பொதுவாக்கவே   
அமைதி வழி காட்டும்   
அன்பு மொழி   
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே  
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்   
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்   
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு   
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்   
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்   
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை  
அழகாக வகுத்தளித்து   
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -   
ஓதி வளரும் உயிரான உலகமொழி -   
நம் மொழி - நம் மொழி - அதுவே   
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்!   
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
-மு கருணாநிதி
 
No comments:
Post a Comment